Pages

Wednesday, August 15, 2012

என் பார்வையில் ஸ்மைல் எட்டாம் ஆண்டு நிறைவு விழா



காஞ்சிபுரம் இல்ல மாணவிகள் மற்றும் PPRR மாணவிகளை அழைத்துக்கொண்டு நானும், கலாநிதி அண்ணாவும் காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பியதிலிருந்தே விழாவின் சாரலை நுகர ஆரம்பித்துவிட்டோம்.சென்னை எத்திராஜ்  கல்லுரி கலையரங்கினுள் செல்லும் போது உள்ளேயும் வெளியேயும் நம்மை ஆர்வமுடன் வரவேற்ற நம் ஸ்மைல் அண்ணாக்களும், அக்காக்களும் சுறுசுறுப்புடன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.நாங்கள் அழைத்து வந்த மாணவிகளை உள்ளே அழைத்து சென்றபோது எத்திராஜ் கலையரங்கினுள் ஓவியங்கள் அமர்ந்துகொண்டும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டும் இருந்ததை பார்த்து அதுவரை மாணவிகளாக எங்களோடு வந்தவர்களும் மழலையாகிப் போனார்கள்.

 சிறப்பு விருந்தினர்களின் வருகைக்கு பிறகு சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.முதலில் "Journey of Smile"  என்று ஸ்மைல் கடந்து வந்த பாதைகளின் தொகுப்பினை அழகான மெல்லிசையுடன் திரையில் விரிய என் போன்ற ஸ்மைல் தன்னார்வலர்களுக்கே அந்த தொகுப்பு பல புதிய அனுபவங்களையும் வியப்புகளையும் ஏற்படுத்தியது என்றால்,சிறப்பு விருந்தினர்கள்,நன்கொடையாளர்கள்,மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு நிச்சயமாக அந்த தொகுப்பு பல மாற்றங்களையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தி இருக்கும் என்றால் அது மிகையல்ல.
பிறகு நம்ம சகோதரி நிர்மலாவின் வரவேற்புரை அட்டகாசமான தமிழில் நல்ல கவிதை வரிகளில் அண்ணாக்கள் சொல்வதாகவும் ,மாணவிகள் சொல்வதாகவும் என கவிதை மழையோடு தென்றலாய் பேசி அட்டகாசமாய் தொடங்கிவைத்தார்.

அடுத்து நம்ம வாசு அண்ணா வைரமுத்துவின் காதலித்து பார் கவிதையை  டப்பிங் செய்த கவிதையோடு தன் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தார்.ஸ்மைலில் காலடி வைத்துப்பார் உனக்கும் வாழ்க்கைக்கும் இடையே ஒரு உருண்டை உருளக்காண்பாய் என ஆரம்பித்து வால்டாக்ஸ்,கொசப்பேட்டை இல்லத்திற்கு சென்று பார் சொர்க்கத்தை காண்பாய் பிறகு அதையே நரகம் என்பாய் என்று ரணகளமாய் நிகழ்ச்சி நிரலை ஆரம்பித்து ஸ்மைல் பற்றி விவரிக்க நித்தியானந்தம் அண்ணாவை அழைத்தார்.நித்தியானந்தம் அண்ணா ஸ்மைல் பற்றி விரிவாக எடுத்துரைக்க அரங்கில் எழுந்த கரகோஷம் அரங்கத்தின் மௌனத்தினை புரட்டிபோட்டது.

அடுத்து ஸ்மைலும்  நானும் என பேச வந்தார் நம்ம தமிழ் அண்ணா,வள்ளி அண்ணா மூலமாகத்தான் ஸ்மைல் தெரியும் என ஆரம்பித்து அப்படியே தன் வால்டாக்ஸ்,கொசப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் இல்லங்களில் தனி வகுப்பினை எடுத்த அனுபவத்தினையும் ,காஞ்சிபுரத்தில் வகுப்பு எடுக்கும்போது காலைல செய்யார்ல இருந்து கிளம்பி வந்து வகுப்பு எடுக்க ஒரு கோவிலுக்கு  போய்ட்டு வந்து வகுப்பு எடுப்போம்நு சொல்லி அதையெல்லாம் மறக்கமுடியாத பொக்கிஷங்கல்னு சொல்லும்போது நாமும் அந்த நாட்களுக்கு பயணித்தோம்.அப்புறம் கொசப்பேட்டை இல்லத்துல தனி  வகுப்பு எடுக்க ஆரம்பித்த பிறகு அவர் அம்மா தமிழ்க்கு கோபம் கூட வருமா என கேட்டதாய் சொன்னபோது அரங்கமே சிரிப்பொலியில் திளைத்தது.அடுத்து பேச வந்த துர்கா என்ற மாணவி ஸ்மைலும் நானும் என பேச வந்ததும் ஸ்மைலும் நானும் அப்படிங்கிறத விட ஸ்மைலும்  நாங்களும் பேசுறேன்னு மிகவும் தன்னம்பிக்கையோடு ஸ்மைல் எப்படி தங்கள் வாழ்கையில் இருந்தது என்று மிகத்தெளிவாக பேசியதை கேட்டபோது நாம் ஸ்மைல் மூலம் பல நல்ல விதைகளை விருட்சமாக மாற்றிக் கொண்டு வருகிறோம் என்ற நம்பிக்கை உற்றெடுக்க ஆரம்பித்தது.  

அடுத்து மறக்க முடியுமா என்று சிறப்பு வீடியோ தொகுப்பினை போட்டதும் அதில் நம் தன்னார்வலர்கள் அவர்களின் அனுபவங்களை சொல்ல அதை நாம் திரையில் பார்க்கும்போது புது அனுபவத்தினையும் ,புது உந்துதலையும் தந்தது.அந்த குறும்படம் முடிந்தவுடன் மேடையேறிய நம்ம வள்ளிகாந்தன் அண்ணா ஸ்மைல் படிப்பாளிகளை மட்டும் அல்ல படைப்பாளிகளையும் உருவாக்கி வருகிறது என்று தன் சொந்த அனுபவத்தையும் இந்த குறும்படத்தினை இயக்கிய ரத்தினவேல் மற்றும் அவர் குழுவினரையும் மேடையேற்றி இந்த படத்தில் சிலகுறைகள் இருக்கும் ,ஏன்னா இதை ஒரே நாளில் படமாக்கி எடிட்டிங் வேலை அன்று காலை 10 மணி வரை சென்றது என்று சொன்னபோது தூங்காமல் அவர்கள் செய்த உழைப்பு வீண் போகவில்லை என்பதை அரங்கினுள் எழுந்த கரவொலியில் தெளிவாக உணர முடிந்தது.

அடுத்து இந்த வருடத்தின் செலவுகளையும் திட்டங்களையும் தொகுத்து வழங்கிய ப்ராஜெக்ட் ரிப்போர்ட் இனிதே நடந்தது. அப்போது சாதனா பற்றி குணா அண்ணா விவரிக்கும் போது ஒரு தகவலை நான் புதிதாக அறிந்துகொண்டேன்.சுயம் தொண்டு நிறுவனம் தான் தங்களுக்கு உந்துதலாக இருந்ததாக குறிப்பிட்ட அண்ணா ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று அந்த தொண்டு நிறுவனத்திற்கு சென்று அங்கே சில உதவிகளை செய்துவிட்டு அந்த வருடத்திற்கான ஸ்மைல் பணிகளை தொடங்குவோம் என்று சொன்னது எனக்கு புதிய தகவலாக இருந்தது.அதுவரை அமைதியாய் கீழ் வரிசையில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைத்து குத்து விளக்கினை ஏற்றி அவர்களை மேடையில் அமரவைத்து முதலில் சாதனா 2012  மாணவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் கரங்களால் மாணவர்களுக்கு வழங்கி பிறகு ஒவொரு சிறப்புவிருந்தினர்களையும் பேச அழைத்தனர்.

சிறப்பு விருந்தினர்கள் எல்லோரும் நன்றாக பேசினாலும் முத்தாய்ப்பாக பேசிய 3  பேரை மட்டும் இங்கே குறுப்பிட விரும்புகிறேன்.
இளங்கோவன் சார் பற்றி குணா அண்ணன் சொன்னது உண்மைதான் என்பதனை மெய்பிக்கும் வகையில் ஆணித்தரமான தான் பேச்சினால் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து நம் தன்னம்பிக்கையினை உசிப்பி விட்டு சென்றார்.இந்தியாவினை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அவர் வகுக்கும் திட்டங்கள் மிகவும் அருமையானவை.நம்மையும் அந்த இலக்கினை நோக்கி பயணம் செய்யுமாறு அவர் சொன்ன வார்த்தைகள் சுடர் விட்டு இன்னும் கனந்து கொண்டிருகின்றன.பொறியியல் படிப்பு மட்டும் படிப்பல்ல அதை தாண்டி எதை படித்தாலும் அதில் உன் திறைமையினை வெளிப்படுத்தினால் நீதான்யா ஹீரோனு அவர் சொன்னது மாணவர்களுக்கு ஒரு டானிக்.வரலாறு படிச்சிட்டு வரலாறு படை என்று அவர் சொன்னது முத்தாய்ப்பாய் அமைந்தது.எல்லாவற்றிகும் மேலாக அவரின் சொந்த வாழ்க்கை அனுபவம் நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்து அவரை நம் முன் மாதிரியாய் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு இருந்தது அவரின் அனல் பேச்சு.

அடுத்து அமெரிக்க வாழ் தமிழரான ஜெயா மேடம், அவங்க நம்ம நிகச்சியில கலந்துகிட்ட வழியை சொல்லும்போதே அவர் மேல ஒரு மதிப்பு வந்துவிட்டது.எல்லாத்துக்கும் மேல நம்ம தேவி சொன்ன மாதிரி வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நம் பாரம்பரியம் மாறாமல் அவங்க நடந்துகிறதையும் அதுக்காக தமிழ்ச்சங்கம் அமைத்து நம் தமிழ் குடும்பங்களை ஒன்றிணைப்பதையும் கேட்கும் போது நாமெல்லாம் என்ன செய்தோம்னு தோணுது.அப்புறம் அவங்க தேவி போன்ற மாணவர்களை தேர்ந்தெடுக்கும் போது சொன்ன 3 கண்டிஷன்கள் மிகவும் அருமை.அவரிடம் பேச நேர்ந்தபோது அவர் நம் ஸ்மைலுடன் சேர்ந்து உதவி செய்ய இருப்பதாகவும் தான் தன் தமிழ்ச்சங்கம் மூலம் பொருளுதவி செய்ய நல்ல சமுக அமைப்பை தேடியதாகவும் தற்போது ஸ்மைல் பார்த்த பிறகு நமக்கு உதவ தயாராய் இருப்பதாகவும் சொல்லி நம் ஸ்மைல் இணையதள முகவரியையும் கேட்டது ,நம் ஸ்மைல் பயணத்தின் வலிமையினை மேலும் வலுவாக்கியது.  

அடுத்து தாமதமாய் வந்தாலும் தான் பேச்சில் வட்டியும் முதலுமாய் பல நல் விஷயங்களை தூவி நம் அமைப்பினை பாராட்டி பேசினார்  ஆனந்த விகடன் ராஜு முருகன் அவர்கள்.மேலும் கல்வி என்பது  வெறும் அறிவு அல்ல அது ஒரு இனம்,மொழி ,நாடு,உறவு என கூறி அந்த கல்வியினை நாம் மாணவர்களுக்கு வழங்குவதை சிறப்பான ஒன்று என வாழ்த்தினார். அடுத்து நம்ம VZ சார் சொன்னது மாதிரியே ஸ்மைல் படிப்பாளிகளை,படைப்பாளிகளை மட்டும் அல்ல பண்பாளர்களையும் உருவாக்குகிறது என கூறியது மிகவும் கவனிக்கத்தக்கதாய் அமைந்தது.
அடுத்து நம்ம வாசு அண்ணா சொன்ன ஒரு விஷயம் நாம எங்க இருக்கோம் அப்படின்னு  நமக்கு தெளிவுபடுத்தியது.அண்ணாக்கு என்ன அச்சோ என்று மாணவியும்,  மாணவியின்  தாயும் வருந்தி சாமிக்கு 1000  ரூபாய் வேண்டியதையும்,கோவிலுக்கு வேண்டியதுக்கு பதில் தேர்வு கட்டணம் கட்டியிருக்கலாமே என்றதுக்கு பணம் எப்பவேணும்னாலும் கட்டிக்கலாம் ஆனா உங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு  வேண்டிகிட்டதை சொன்னபோது ஒருகணம் நம்மை அறியாமல் நம் விழிகளில் நீர் அரும்ப ஆரம்பித்தது,அந்த நீர் நம் செயலை வளர்க்க உதவும் காரணியாகத்தான் என்னால் உணரமுடிந்தது.

சிறப்பு அழைப்பாளர்கள் பேசும் போதே இடையிடையே 12 ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் சாதனா மாணவ மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினர்.அடுத்து கட்டமாக ஸ்மைல் சிறப்பு விருது சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்தனர்.பிறகு உணவு இடைவேளை விட்டு பிறகு நம் பிஞ்சுகளின் நடன நிகழ்சிகள் கலை கட்ட ஆரம்பித்தது.

நம்ம பிஞ்சுகள் நிறைய பயிற்சிகள் இல்லாமல் ஆடிய ஆட்டத்தினை பார்க்கும் போது நம்மை அறியாமல் கைகளை தட்டி விசிலடித்து மகிழ்ந்தோம்.அதுவும் "என் பேரு சரவெடி நான் நடந்தால் அதிரடி,அடடா மழைடா அடைமழைடானு"  நம்ம ரெண்டு சின்ன குட்டீஸ் போட்ட நடனம் செம சூப்பர்.அப்புறம் நம்ம வாசு அன்னவா பசங்க படுத்தின பாடு இருக்கே அண்ணா அந்த நாற்காலிய எடுத்து இப்படி நடுவுல வைங்கன்னு உத்தரவு போட்ட சிறுமி அப்புறம் அந்த நடனத்தின் நடுவே நடனமாடிய  நம் மாணவி அந்த நாற்காலியில் அமர்ந்து அழகாய் ஸ்டைலாய் தலையையும் காலையும் அசைத்து அமர்க்களப்படுத்தி  விட்டார்.இதையெல்லாம் பின்னாடி  இருந்ததால்  கவனிக்காத நம்ம வாசு அண்ணா இந்த நாற்காலியை என்னை எதுக்கு இங்க போட சொன்னேன்னு கேட்டபோது அரங்கமே சிரிப்பொலியில் மிதந்தது.நம்ம வள்ளி அண்ணா சொன்னதுபோல ஸ்மைல் படைப்பாளிகளையும் உருவாக்குகிறது என்பதை நிருபிக்கும் விதமாய் அமைந்த நம் மாணவிகளின் பொம்மலாட்ட நிகழ்ச்சி மிகவும் அருமை.அந்த பெண் செய்த விதமும் பேசிய குரலின் மாடுலேசனும் சூப்பர்.இப்படியாக நம் நிகழ்ச்சி இனிதாய் நிறைவடைய நம் மாணவிகளை வழி அனுப்பி அரங்கினை நாம் காலி செய்ய ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது இந்த நிகழ்ச்சி.