Pages

Saturday, June 26, 2010

நான் கடவுள்

ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம்.

நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை.

சத்தமாகக் கேட்டான். "என்னுடன் வருவது யார்?"

"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.

அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. 'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'.

பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் மறந்தான். சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.

ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான் அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது. 'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள் கேட்டுக் கொண்டவன் கால்தடங்களைக் கவனித்தான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.

அவன் சற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம் ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான். "கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள், துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே இது நியாயமா?"

கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை. உன் துன்பகாலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல. என்னுடையவை. இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன். அதனால் தான் நீ உன்னுடைய காலடிசுவடுகளைக் காணமுடியவில்லை...."

அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய நேரம் ஆயிற்று.

குற்றம் காண்பதில் மனிதன் சமர்த்தன். அவனுக்கு அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதில்லை. கஷ்ட காலங்களில் உறவும் நட்பும் காணாமல் போவது போல கடவுளின் அருளும் காணாமல் போவதாக அவன் என்ணுவதில் வியப்பில்லை. சுமைகள் கூடும் போது, இறக்கி வைக்க வழி தெரியாத போது இருக்கவே இருக்கிறார் கடவுள், அவனிடம் வசவுகள் வாங்கிக் கொள்ள.

வந்த கஷ்டங்கள் நமக்குத் தெரியும். எத்தனையோ கஷ்டங்கள் வரவிருந்து, அவை இறையருளால் வராமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம். அவை நம் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகிறது. கடவுள் கணக்கு சொல்வதில்லை. எனவே எத்தனையோ உண்மைகள் நமக்குத் தெரியாமலேயே போய் விடுகின்றன.

துன்பங்களும், சோதனைக் காலங்களும் வரும் போது நாம் ஒரு பெரிய உண்மையை மறந்து விடக்கூடாது. எதுவுமே காரணம் இல்லாமல் நம்மிடம் வருவதில்லை. அவற்றில் சில நாம் சம்பாதித்தவை. நம் முந்தைய செயல்களின் விளைவுகள். நாமே வரவழைத்தவற்றை நாம் சந்தித்தே ஆக வேண்டியுள்ளது. மறுப்பதும் எதிர்ப்பதும் நியாயமல்ல. மற்றவை நாம் வளர, பக்குவப்படத் தேவையான அனுபவங்கள். நாம் கற்க வேண்டிய பாடங்கள். அவற்றைக் கற்றறிந்த பின்னரே, அந்த சோதனைத் தீயில் பட்ட பின்னரே நாம் புடம் போட்ட தங்கமாய் மிளிரப் போகிறோம். அவை நம் வாழ்வில் வரா விட்டால் நாம் சோபிப்பதுமில்லை.

கையால் மென்மையாக தடவிக் கொடுத்தே கல்லை சிலையாக முடியாது. இன்பங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தால் நாம் பக்குவமடைவதும் சாத்தியமல்ல. உளிக்கு கல்லின் மீது பகையில்லை. உளியடிகளைத் தாங்காத கல் அழகிய சிலையாவதில்லை. கடவுள் என்ற சிற்பி நம்மைச் செதுக்கும் போது அழகிய சிலையாகப் போகிறோம் என்ற உணர்வுடன் தாங்கிக் கொண்டால், இது அர்த்தமில்லாததல்ல என்று புரிந்து கொண்டால் அந்த அடிகளும் நமக்கு ஆனந்தமே.

இன்னொரு விதமாகவும் சொல்லலாம். மருந்து கசக்கிறது என்று குழந்தை கதறியழுதால் தாய் விட்டு விட மாட்டாள். குழந்தை குணமாக வேண்டும் என்று அக்கறை அவளுக்கு அதிகமுண்டு. பலவந்தமாக மருந்தை குழந்தை வாயில் திணிக்கையில் குழந்தை தாயை ஒரு கொடுமைக்காரியாகக் கூட நினைக்கலாம். குழந்தை என்ன நினைக்கிறது என்பது தாயிற்கு முக்கியமல்ல. குழந்தை குணமாக வேண்டும் என்பதே தாயிற்கு முக்கியம். குழந்தைக்கு எது நல்லது என்பதை குழந்தையை விடத் தாய் நன்றாக அறிவாள். கடவுளும் அந்தத் தாயைப் போல் தான்.

இனி கஷ்ட காலங்கள் வரும் போது கடவுளை வையாதீர்கள். அவற்றைத் தாங்கும் சக்தியையும் அவற்றிலிருந்து கற்கும் புத்தியையும் மட்டுமே கடவுளிடம் வேண்டுங்கள்.

கஷ்டகாலங்களில் தைரியத்தையும் இழக்காதீர்கள். உங்களுக்கு நடக்க முடியாத போது சுமக்கத் தயாராய் கடவுள் உங்களுடனேயே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பயணம் சுலபமாகும். முடிவு கண்டிப்பாக இனிமையாகும்.

--- எனக்கு பிடித்தவை

கடி -1 ‏

பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்போ பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா? (what a pity)

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?

c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... துரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....



11) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

12) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

13) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

14) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

15) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

16) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

17) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

Next மீட் பண்றேன்...

அப்பா..

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...

முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறுவார் அப்பா
இன்று அவர்
தடுமாறிய போது
அருகில் நான் இல்லை...

அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என.

எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் அருகில் இல்லை..

அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
அவர்கள் அருகில் இல்லாமலும் போகலாம்...

----- எங்கயோ சுட்டது

மனம் விட்டுப் பேசுங்கள்

தவறாகப்புரிந்துகொள்ளுதல் ஒரு விளக்கம்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு
மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று
போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக்
கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த
உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து
கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக
வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே
மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடு
திரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து
வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும்
அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக்
கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும்
ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள்
வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும்
மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான்.
"அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான்.
"நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும்
உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான்
என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக்
கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன்
அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ
மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும்
போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப்
பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன்
தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை
என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து
வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம்
கேட்டிருக்கலாம்.. மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம்
கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால்
அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின்
நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி
வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன் இப்படி நடந்து
கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம்.
அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே
தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல்
இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம்.
சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை
தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது
உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத்
தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக
அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து
கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப்
புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும்
சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும்
காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும்
நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ,
மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி
அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம்
விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது
லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே
வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்த தாரக
மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப் கேளுங்கள்.
மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய
பொழுதாக அமையட்டும்!!..

ப்ப்ப்ளான் பண்ணி... படியுங்க


விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம், "கல்வி என்பது என்ன?" என்று ஒருவர் கேட்டார். அதற்கு, "நீங்கள் உங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வந்து பல வருடம் ஆகியிருக்கும். ஆனால், அதன் பின்பும் உங்கள் மனதில் அங்கு கற்ற விஷயங்களில் எது நினைவில் இருக்கிறதோ... அதுதான் நீங்கள் உண்மையில் கற்ற கல்வி" என்றாராம் ஐன்ஸ்டீன்.

'வெள்ளத்தாலும், நெருப்பாலும் அழிக்க முடியாத பெருஞ்செல்வம், ஒருவன் கற்ற கல்வி' என்றார் வள்ளுவர்.

நம் வீட்டுக் குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னேறினால் போதும் என நல்ல ஸ்கூல் தேடி அலைந்து, க்யூவில் நின்று அப்ளிக்கேஷன் வாங்கி பல ஆயிரங்களை செலவு செய்து அந்த கல்வியைக் கொடுப்பதற்கு காரணமே... அதைத் தவிர பெருஞ்செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதுதான். அத்தகைய கல்வி... முழுமையான, சிறந்ததான, பயன் கொடுக்கவல்லதாக அமைய சில அனுபவ வழிமுறைகளைச் சொல்கிறது இந்த டிப்ஸ் புத்தகம். உங்கள் அனுபவத்தோடு இதனையும் சேர்த்து செயல்படுத்திப் பாருங்கள். தனலஷ்மியையும் தானே அழைத்து வருவாள் சரஸ்வதி!

ஆல் த பெஸ்ட்!

ப்ப்ப்ளான் பண்ணி... படியுங்கள்!

1. ஆசிரியருக்காக, மார்க்குக்காக ஒரு பாடத்தை 'படிக்க வேண்டுமே...' என படிக்காமல், என்ன நோக்கத்துக்காகப் படிக்கிறோம் என்ற தெளிவுடன் படித்தால், படிப்பது உடனே மனதில் பதியும்.

2. சில பாடங்களை நேரடியாகப் படிக்காமல், அதற்கு முந்தைய... அதாவது ஐந்தாம் பாடமென்றால், நான்காம் பாடத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, அடுத்த பாடத்துக்கு வந்தால் படிக்கப் படிக்க எளிதாக இருக்கும். குழப்பங்கள் வராது.


3. 'எத்தனை மணி நேரம் படிக்க வேண்டும்..?' - இதுதான் எல்லாருக்கும் வருகிற முதல் சந்தேகம். தொடர்ந்து 40-45 நிமிடங்கள் படிக்கலாம். திடீரென மூளை சோர்வடைந்தது போல் தோன்றினால் 5 நிமிட ரெஸ்ட்டுக்குப் பிறகு மீண்டும் தொடரலாம். எவ்வளவு மணி நேரம் என்பது அவரவர் திறமையையும், பாடத்திட்டத்தையும் பொறுத்தது. இது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
4. இந்த சப்ஜெக்டை இத்தனை மணி நேரத்துக்குள் படித்துவிட வேண்டும் என்ற முடிவோடு உட்காருங்கள். உதாரணமாக, பாட்டனியில் தாவர செல் அனாடமியை காலை 6.30 - 7.30-க்குள் படித்து முடித்து விட வேண்டும் என்று உட்காருங்கள். நிச்சயம் முடித்திருப்பீர்கள். அப்படி முடியாமல் போனால் இன்னும் அரை மணி நேரத்துக்குள் படிக்க வேண்டும் என்று நேரத்தை நீட்டியுங்கள். நேர நிர்வாகம் படிப்பில் மிக முக்கியம்.

5. 'இந்த நேரத்துக்குள் இந்த சப்ஜெக்ட்டை படித்து முடித்து விடுவேன்' என்று நேரத்தை ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக, உங்கள் திறமை, பாடத்தின் எளிமை, கடினம் இதையெல்லாம் கணக்கிட்டு, 'டைம் அலாட்' செய்யுங்கள்.

6 கஷ்டமான மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி ஃபார்முலாக்கள், உயிரியல் சயின்டிஃபிக் நேம்ஸ்களை டேப், சி.டி. அல்லது பென்டிரைவ்வில் பதிவு செய்து போட்டுக் கேட்கலாம்.

7. உங்களுக்கு ஒரு பாடமோ, ஒரு பாடத்தில் ஒரு பிரிவோ புரியவில்லை எனில், அதை நீங்களே வாய்விட்டு ஆசிரியர் போல உங்களுக்கே சொல்லித் தந்து பாருங்கள். உடனே எளிமையாகப் புரியும்.

8. எல்லாவற்றையும்விட, 'நன்றாக படிப்பது என்பது என் பொறுப்பு. அதுதான் என் வேலை. என்னைப் பெற்றவர்களுக்கு நான் செய்யும் சிறந்த கடமை' என்ற எண்ணத்தைப் படிக்கும் மாணவர்கள் ஆழமாக பதியவைத்துக் கொண்டால், கடமை கரும்பாக இனிக்கும்.

9. எங்கு படிக்க வேண்டும்..? எங்கு வேண்டுமானாலும். ஆனால், படிக்கும் சூழல்... அமைதியாக, சுத்தமாக, கவனத்தை சிதறடிக்காத இடமாக இருத்தல் அவசியம்.

ஸ்பெஷல் ஸ்டடி...குரூப் ஸ்டடி!

10. யாருடனும் உட்கார்ந்து படிக்காமல் தனியாக உட்கார்ந்து படித்தால்தான் உடனே மனதில் பதியும் என்று நம்பினால் தொடர்ந்து அப்படியே படியுங்கள். 'குரூப் ஸ்டடி' கை கொடுத்தால், நல்ல குரூப் அமைத்துக் கொள்ளுங்கள்.

11. எந்த நேரத்தில் படித்தால் மிகச் சிறப்பாகப் படிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு காலை என்றால் காலையிலோ... மாலை என்றால் மாலையிலோ படியுங்கள்.

12. எந்தப் பாடத்தைப் படிக்கப் போகிறீர்களோ... அந்த பாடத்தை விருப்பத்தோடு பிரியுங்கள்... படியுங்கள். அதன் பலன், பல மடங்கு இருக்கும். உதாரணமாக, கணக்குப் பாடத்தில் 'கால்குலஸ்' சேப்டர் மண்டையை காய வைக்கும் என்ற எரிச்சலுடன் உட்காருவதைவிட, 'என்னால் ஈஸியாக இதைப் படிக்க முடியும்... என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்..?' என்ற நம்பிக்கையோடு ஆரம்பித்துப் பாருங்கள். கால்குலஸும் இனிக்கும்!

13 உங்கள் மூளைக்கு அதிக திறன் இருக்கலாம். ஆனால், அதன் கவனம் ஒன்றின் மீது மட்டும் குவியும்போது பலன் அதிகமிருக்கும். எனவே, டி.வி. பார்த்துக் கொண்டோ, எஃப்.எம். கேட்டுக் கொண்டோ ஃபிசிக்ஸைப் படித்தால் ஃபிசிக்ஸும் மனதில் உட்காராது. பாட்டும் உட்காராது.

14 ஃப்ரெண்ட்ஸ், அம்மா, அப்பா என்று யாருடனாவது சண்டை போட்டிருந்தால், அந்தக் கவலையுடனேயே படிக்க உட்காராமல் சண்டை போட்டவர்களுடன் 'பழம்' விட்டுவிட்டு, மனக்குழப்பங்களுக்கு 'குட் பை' சொல்லிவிட்டுப் படிக்க உட்காருங்கள். இல்லையென்றால், நீங்கள் எத்தனை மணி நேரம் படித்தாலும் பாடம் மண்டையில் ஏறாது.

15. படிக்க உட்காரும் முன் பசியாக இருந்தால்... வயிறு நிரம்பச் சாப்பிடாமல், தேவையான அளவு சாப்பிடுங்கள். தண்ணீர் குடிக்க, பாத்ரூம் செல்ல என அடிக்கடி எழுந்து போகமல் இருக்க முன்கூட்டியே இவை அனைத்தையும் செய்து முடியுங்கள்.

16. படிக்கும் பாடத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைவிட, ஒருமுறை எழுதிப் பார்த்துவிட்டால் மனதில் ஆழமாகப் பதியும்.

17 படிக்கும்போது சிறு சிறு குறிப்புகளை நோட்ஸாக எடுத்துக் கொண்டால்... நிச்சயம் மறக்காது. உதாரணமாக, 'இந்திய நாடாளுமன்றம்' என்ற பாடப் பிரிவில் வரும் அத்தனை விஷயங்களையும் சிறு சிறு நோட்ஸாக எடுக்கும்போது, 'இந்தப் பிரிவில் 18 பாயின்ட்டுகள் வந்தன. 3-வது பாயின்ட் இது, 2-வது இது' என எதுவும் மறக்காது. ஒருவேளை மறந்தாலும் சீக்கிரம் நினைவுக்குக் கொண்டு வந்து விடலாம்.

18. எல்லாப் பாடங்களிலும் உங்களுக்கு முந்தைய வருட கேள்வித் தாளை வாங்கிப் படித்தால், எந்த டாபிக்குக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று புரியும்.

19. படிக்கும்போது முக்கியமான பாயின்ட்டுகளை கலர் பென்சில் அல்லது பேனாவால் கோடிட்டுக் கொண்டால் அது எப்போதும் மறக்கவே மறக்காது.

டென்ஷன் இல்லாமல் கிளம்பலாமே..!

20. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் லீவு முடித்து, திங்கட்கிழமை காலையில் 'ஒரு ஷ¨வைக் காணோம், சாக்ஸைக் காணோம்...' என்று டென்ஷனாவதைவிட, ஞாயிற்றுக்கிழமை இரவே அடுத்த நாள் அணிந்து செல்லும் ஷ¨, சாக்ஸ், டை, யூனிஃபார்ம், லஞ்ச் பேக், டவல் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் எடுத்து வைத்துக் கொண்டால் நோ டென்ஷன்... நெவர் டென்ஷன்.

21. பள்ளி முடிந்து வந்ததும் காலி டிபன் பாக்ஸை பாத்திரம் கழுவப்போட வேண்டும். புத்தகப்பையை ஷெல்ஃப்பில்தான் வைக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை பழக்கப்படுத்திக் கொண்டால், 'அதைக் காணோம்... இதைக் காணோம்' என்கிற கூச்சல் காணாமல் போய்விடும்.

22. ஸ்கூல் டைம்டேபிளை எழுதி, வீட்டில் கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துவிட்டால்... அன்றன்று உள்ள பீரியடுகளுக்கு ஏற்றபடி நோட், புத்தகங்களை எடுத்துச் செல்லலாம். தினமும் அனைத்துப் புத்தகங்களையும் 'பொதி' சுமக்கத் தேவையில்லை.

23. "நேத்தும் ஸ்கூலுக்கும் நான் லேட்... இன்னிக்கும் லேட்டா போகணுமா... சீக்கிரமா டிபன் பாக்ஸை கொடுங்க" என்று அம்மாவை அதட்டுவதற்குப் பதில், காலையில் எப்போதும் சரியான நேரத்துக்கு எழுந்து விடுங்கள். தலை வாருவது, வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடிப்பது, லஞ்ச் பாக்ஸ், டவலை எடுத்து வைத்துக் கொள்வது போன்ற சின்ன சின்ன வேலைகளை நீங்களே செய்துகொண்டால், அம்மாக்களுக்கு இன்னும் நேரம் மிச்சமாகும். சரியான நேரத்தில் உங்களை கிளப்பிவிடுவார்கள்.

24. சாக்ஸ், ரிப்பன் போன்றவற்றின் ஜோடி காணாமல் போகாமல் இருக்க, துவைத்துக் காய்ந்ததும் ஜோடியாக முடிச்சுப் போட்டு வைத்துவிடுங்கள். கடைசி நேரத்தில் தேடும் டென்ஷன் இருக்காது.
25. வீட்டை விட்டுக் கிளம்புமுன் எடுத்துக்கொள்ள வேண்டிய பாடப் புத்தகங்கள், நோட், ஸ்போர்ட்ஸ் அயிட்டம், பென்சில், பேனா, எரேஸர், ஷார்ப்னர், ஸ்கேல், லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் இருக்கிறதா என்று ஒரு 'செக் லிஸ்ட்'டை மைண்டில் வைத்து செக் பண்ணுங்கள். எப்போதும் ஒரு ஸ்பேர் பேனா, பென்சில் செட் வைத்துக்கொள்வது டென்ஷனிலிருந்து விடுதலை கொடுக்கும்.

26. பள்ளி, கல்லூரிக்கு சைக்கிள் அல்லது டூ-வீலரில் செல்பவர்கள் டயரில் காற்று இருக்கிறதா, பஞ்சர் இல்லாமல் இருக்கிறதா என்பதை கடைசி நிமிடத்தில் பார்க்காமல் காலையிலேயே செக் பண்ணுவது உசிதம். வண்டி இப்போதைக்கு ரெடியாகாது என்று தெரிந்தால்... மாற்று வழிமுறை என்ன என்பதை உடனே முடிவு செய்யுங்கள். 'லேட்' என்ற டிஃபால்ட்டிலிருந்து தப்பிக்கலாம்.

கட்டாயம் வேண்டுமா டியூஷன்..?

காலை எழுந்ததும் மேத்ஸ் டியூஷன், ஈவினிங் சயின்ஸ் டியூஷன் என பள்ளிக்கு செல்வது போல் டியூஷன் செல்வதும் கட்டாயம் என்ற தோற்றம் உருவாகி உள்ளது. 'டியூஷன் அவசியமா?' என்று கேட்டால், 'இல்லவே இல்லை...' என்று சொல்லலாம், கீழே இருப்பவற்றைச் சரிவர பின்பற்றினால்...


27. பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தும்போதே முழு கவனத்துடன் பாடத்தைக் கவனித்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். வீடு திரும்பியதும் அன்றைய தினமே அதை ஒருமுறை திருப்பிப் பார்த்து, அதில் உள்ள மெயின் ஹெட்டிங், சைட் ஹெட்டிங் பாயின்ட்டுகளை மனதுக்குள் குறித்துக் கொண்டால் போதும்.

28. அடுத்த ஒரு வாரத்துக்குள் அந்தப் பாடத்தை முழுவதுமாகப் படித்து விட்டால், பரீட்சை நேரத்தில் ஜஸ்ட் ரிவிஷன் செய்தால் மட்டும் போதுமானதாக இருக்கும்.

29. தினமும் காலையில் குறைந்தபட்சம் 1-2 மணி நேரமும், மாலையில் அதே அளவு நேரமும் படித்து விட்டால், 'எதற்கு டியூஷன்?' என்ற கேள்வி உங்களுக்கே தோன்றும். அதன் பிறகு 'டியூஷன் போனால்தான் நாம் படிக்க முடியும்' என்ற மாயை உங்களுக்கு 'டாட்டா' காட்டும்.

30. நீங்கள் ஒரு சப்ஜெக்டில் 'வீக்'காக இருக்கும் பட்சத்தில்தான் டியூஷன் செல்கிறீர்கள். டியூஷனில் அந்தப் பாடத்தை தெளிவு படுத்துவார்கள். அதே பாடத்தை பலமுறை எழுதி காண்பிக்கச் சொல்வார்கள். அதேபோல, உங்களுக்குச் சந்தேகமிருக்கும் பாடத்தை உங்கள் ஆசிரியரிடமே கேட்டுத் தெளிவு பெறலாம். வீட்டிலிருக்கும் அக்கா, அண்ணன், அம்மா, அப்பா என்று யாருடைய உதவியையாவது நாடலாம். இவர்களால் உங்களுக்கு முழுமையாக உதவ முடியாது என்ற போது டியூஷன் பற்றி யோசிக்கலாம்.

அதிக பணம் கொடுத்து வாங்கும் கைடு, நோட்ஸ் அவசியமா..?

பாடப் புத்தகம் ஐந்து என்றால், அதற்காகப் பயன்படுத்தும் கைடு ஆறாக இருக்கும். அதிலும் இந்த கம்பெனி நோட்ஸ்தான் பெட்டர், அந்த கம்பெனி நோட்ஸ்தான் பெட்டர் என்று கம்பெனிக்கு ஒன்றாக வாங்குவது அவசியமே இல்லை. காரணங்கள்...

31. பாடப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களைத்தான் அப்படியே நோட்ஸில் கொடுக்கிறார்கள். அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கான கைடில் பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்வியைவிட நான்கைந்து கேள்விகளை அவர்களே உருவாக்கி பதில் தந்திருப்பார்கள். பாட புத்தகத்தில் இருக்கும் கேள்விகள்தான் பள்ளித் தேர்வுகளில் அதிகம் இடம் பெறும் என்பதை உணருங்கள்.

32. ஒன் வேர்டு ஆன்ஸருக்காகத்தான் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு 'கைடு' வாங்குகிறீர்கள். பாடத்தை ஒவ்வொரு லைனையும் பலமுறை வாசித்துவிட்டால்... எங்கிருந்து, எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஈஸியாக பதில் சொல்ல முடியும்.

33. டீடெய்ல்டு கொஸ்டினுக்கான ஆன்ஸர்களை பாடப் புத்தகத்தில் இருப்பதைவிட வார்த்தை சுருக்கி, குறைத்து கைடில் எழுதியிருப்பார்கள். இரண்டு, மூன்று வரிகள் குறைத்துத் தருவார்கள் என்பதற்காக கைடு வாங்குவது அநாவசியம். அந்தக் கேள்விகளை புத்தகத்தில் படிக்கும் போதுதான் எல்லா பாயின்ட்டுகளையும் முழுமையாக எழுதி, அதிக மதிப்பெண்களை பெற முடியும்.

34. ஆங்கிலம் இரண்டாவது தாளில் இடம் பெறும் 'கிராமர்' ஆசிரியர் நடத்திய உடனே பலருக்கும் புரிந்து விடாது. அதனை பலமுறை டிரயல் அண்டு எர்ரர் என்ற வகையில் எழுதிப் பார்த்தால்தான், 'Direct to Indirect Sentences', 'இதுதான் Past Participle Tense' என்றெல்லாம் தெளிவுக்கு வரும். அதற்காக பல முறை பிராக்டீஸ் செய்வது அவசியம் என்பதால், 'வொர்க் புக்' வாங்கி பயன்படுத்தலாம். இதுவும்கூட பயிற்சிக்காக என்ற அடிப்படையிலேயே சிபாரிசு செய்யலாம்!

பலவீனத்தை பலமாக மாற்றும் டெக்னிக்!

35. சிலருக்கு கணக்கு என்றால் பிணக்கு; அறிவியல் என்றால் அலர்ஜி; வரலாறு என்றால் வயிற்று வலி என்று அந்தப் பாடங்களின் மீது வெறுப்பு வரும். காரணம் கேட்டால்... 'நான் அந்த சப்ஜெக்ட்டில் வீக்' என்று ஒற்றை வரி பதில் வரும். ஒரு சப்ஜெக்ட்டில் வீக்காக இருக்க முதல் காரணம்... அந்த சப்ஜெக்ட் என்றாலே அது கஷ்டமாகத்தான் இருக்கும் என்ற உங்களின் முன்கூட்டிய தீர்மானம்தான் (pre-assumption). அந்த மாதிரி எண்ணங்களைத் தவிர்த்தல் அவசியம்.

36. ஒரு ஆசிரியரை ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் போகும். அதனாலேயே அவர் நடத்துவதை கவனிக்காமல், முழு மனதோடு படிக்காமல், அவர் மேலுள்ள வெறுப்பை பாடத்தில் காட்டினாலும் அந்த சப்ஜெக்ட்டில் வீக் ஆவது நிச்சயம். மனவெறுப்பை மாற்றுவதுதான் வளர்ச்சிக்கு வழி!

37 ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்ட்டில் ஏன் 'வீக்'காக இருக்கிறோம் என்பற்கான காரணங்களை நீங்களே அலசி ஆராய்ந்து, பிரச்னையைத் தீர்க்க வழி தேட வேண்டும்.

38. இயற்பியலில் வரும் கணக்குகளும், ஃபார்முலாவும் பிடிக்கவில்லை; புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் , உடனே அதை வெறுப்பது தவறு. அந்தக் கணக்கை ஒன்றுக்கு இரண்டுமுறை உட்கார்ந்து போட்டுப் பார்த்தால் இயற்பியலில் நீங்கள்தான் கிங்!

39. வரலாறு பாடங்களில் வரும் சம்பவங்களையும் வருடங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாயிருக்கிறது என்றால்... அந்தப் பெயர்களையும் வருடங்களையும் கலர் ஸ்கெட்ச்சில் எழுதி அடிக்கடி கண்ணில் படும் இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்களே ஒரு வரலாறு ஆவீர்கள்!

40. புவியியல் பாடங்களில் வரும் இடம், நாடு, அமைப்பு போன்றவற்றை ஒருவர் இன்னொருவரிடம் மாற்றி மாற்றி விளையாட்டாகச் சொல்லிப் பார்க்கலாம். ஈஸியாக நினைவில் வைத்துக் கொள்ள உங்கள் தோழியின் பெயரை அதனுடன் தொடர்பு படுத்தி வைத்துக் கொண்டால்... ஈஸி... ரொம்ப ஈஸி!

41. கணக்குப் பாடத்தில் ஒரு சேப்டர் முடிந்ததும் அதில் வரும் ஃபார்முலாக்களை நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்துக் கொண்டால், 'இந்த சேப்டரில் இத்தனை ஃபார்முலா' என்ற தெளிவு இருக்கும். சும்மா ரிலாக்ஸ்டாக இருக்கும்போது, அந்தப் பக்கத்தை அடிக்கடித் திருப்பிப் பாருங்கள். கணக்கு... வணக்கம் போடும் உங்களுக்கு.

42. இங்கிலீஷ், தமிழில் வரும் செய்யுளை மனப்பாடம் செய்து உடனே நோட்டில் எழுதிப் பார்த்து விடுங்கள்... அப்புறம் எந்த ரப்பர் வைத்து அழித்தாலும் அழியவே அழியாது!

43. இங்கிலீஷ் கிராமர் தகறாறு என்றால்... பன்னிரண்டு Tense- களையும் எழுதி, அதற்குக் கீழே உதாரணங்களையும் எழுதி வைத்து விடுங்கள். (எ.கா) Ramya is playing -Present continuous tense- மனத்தை விட்டு அகலாது, உதாரணமும், டென்ஸும்!

44. உயிரியல் பாடங்களில் வரும் படங்களை ஒருமுறைக்கு இரு முறை வரைந்து பாகங்களை குறித்து விடுங்கள். பரீட்சையில் அதற்கான பலன் கிடைக்கும்... நிறைய மதிப்பெண்களாக!

45. பொருளாதாரப் பாடங்களை ஒரு சினிமா கதைபோல் மனதுக்குள் ஓட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களோடு சம்பந்தப்படுத்துங்கள்.

46. அக்கவுன்ட்ஸ் கணக்கை நீங்களே ஒரு உதாரணத்தை உருவாக்கி மனதுக்குள் திரும்பத் திரும்ப எழுதிப் பாருங்கள். சி.ஏ. படிப்புக்கு உத்தரவாதம் ரெடி!

பொதுத்தேர்வுக்கு தயாராவது எப்படி..?

47. 'போர்டு எக்ஸாம்... பப்ளிக் எக்ஸாம்' என்றெல்லாம் பயங்காட்டும் பூச்சாண்டிகளுக்குப் பயப்படாதீர்கள். 'பயம் தோல்வியின் முதல் படி; நம்பிக்கை வெற்றியின் அடித்தளம்' - இதை மறக்கவே மறக்காதீர்கள்! அந்த நம்பிக்கையோடு பரீட்சையை அணுகுங்கள்.

48. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ரெடியாகுபவர்கள் வருடத்தின் முதலிலேயே தெளிவான தீர்மானத்துக்கு வந்து விடுங்கள். ஒன்பதாம் வகுப்பில் எந்தெந்தப் பாடத்தில் நீங்கள் வீக்காக இருந்ததாக உணர்ந்தீர்களோ, அந்தப் பாடங்களுக்கு ஆரம்பத்திலிருந்து அதிக 'அட்டென்ஷன்' கொடுங்கள்.

49. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களுக்கு அதிக அட்டென்ஷன் தேவையில்லை என்ற கருத்தை மாற்றுங்கள். அந்தப் பாடங்களில் மார்க் குறைந்தால், மொத்த மார்க்கில் இடிக்கும் என்பதை மறக்காதீர்கள்.

50. இங்கிலீஷ் கிராமரில் தகறாரா? 'ஆக்டிவ் வாய்ஸ், பேஸிவ் வாய்ஸ் தெரியலையே' என்று எக்ஸாம் ஹாலில் சென்று விழிப்பதைத் தவிர்க்க, அது சம்பந்தமான எக்ஸர்சைஸ்களை வீட்டில் பலமுறை பிராக்டீஸ் செய்யுங்கள். 'பிராக்டீஸ் மேக்ஸ் எ மேன் பெர்ஃபெக்ட்!' தமிழ் இலக்கணத்துக்கும் அவ்வாறே..!

51. பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகளில் டிசம்பர் மாதத்திலேயே பாடங்களை முடித்து விடுவார்கள். அடுத்த மூன்று மாதங்களில் ஃபர்ஸ்ட் ரிவிஷன், செகண்ட் ரிவிஷன், தேர்ட் ரிவிஷன் எக்ஸாம் என்று உங்களை தயார்படுத்துவதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ரிவிஷன் எக்ஸாம் என்பது பாதி பப்ளிக் எக்ஸாம் மாதிரி என்று நினைத்து செயல்பட்டால் அதிக மார்க் கியாரண்டி!

52. இந்தந்த கேள்விகள்தான் வரும் என்று குறித்து வைத்து படிப்பதைவிட எல்லாவற்றையும் படித்தால்... எக்ஸாம் ஹாலில், 'ஐயோ, நான் படிச்ச எஸ்ஸே வரலியே' என்று அலற வேண்டிய அவசியமில்லை.

53. அறிவியல் பாடங்களில் அல்வா மாதிரி மார்க்கை அள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் சின்னச் சின்னக் கேள்விகளுக்கும் படங்களை வரைந்து பாகங்களை குறிக்க ஆரம்பத்திலேயே பழகிக் கொள்ள வேண்டும்.

54. டிசம்பர் மாதத்துக்குள்ளேயே பாடத்தில் இருக்கும் அனைத்து சந்தேகங்களையும் ஆசிரியரிடமோ, நண்பர்களிடமோ தீர்த்துக் கொள்ளுங்கள். சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளாமல் இருப்பது அந்தப் பாடத்தை பற்றிய அதிக குழப்பத்தைத் தரும்.

55. பல வருடக் கேள்வித்தாள்களை நண்பர்களிடமிருந்து கலெக்ட் செய்து, படியுங்கள். பாடத்தின் எந்தெந்த பகுதியிலிருந்து எந்தக் கேள்வி அதிகம் கேட்கப்படுகிறது என்ற தெளிவு வரும்.

56. கணக்குப் பாடத்தில் வரும் எல்லா ஃபார்முலாக்களையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லுமளவுக்கு மனப்பாடம் செய்வது அவசியம். பார்முலா தவறானால் மொத்தக் கணக்கும் தவறாகிவிடும் என்பதால் இதற்கு அதிக கவனம் வேண்டும்

57. முதல் ஆறுமாதங்களில் நடத்தப்படும் பாடங்களை ரிவிஷன் டெஸ்ட் நடத்தும்போது பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல், பாடம் நடத்திய 24 மணி நேரத்துக்குள் படித்துவிட்டால், மனதில் 'பச்சக்' என்று ஒட்டிக்கொள்ளும். வெற்றிக்கொடியை ஈஸியாக நாட்டலாம்.

58. வாழ்க்கையில் முக்கியமான பகுதி இந்த பப்ளிக் எக்ஸாம். இருந்தாலும், வாழ்க்கையே பரீட்சை கிடையாது. எனவே, அதைப்பற்றிய அவசியமான அக்கறை இருக்கட்டும். அநாவசிய பதற்றம் வேண்டாம்.

கல்லூரியில் சேரும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

59. கல்லூரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக, நடுக்காட்டில் அமைந்திருந்தால்... அதைத் தவிர்ப்பது நல்லது. நல்ல சாலை, பஸ் போக்குவரத்தும், எளிதில் போய் வரக்கூடிய தொலைவிலும் கல்லூரி அமைந்திருக்கிறதா என்பதை நேரில் சென்று பார்த்து உறுதி செய்யுங்கள்.

60. 'கல்லூரி' என்ற பெயரில் கூரை வேய்ந்த கூடாரத்தில் கோழிப்பண்ணைகள் போல நிறைய கல்லூரிகள் செயல்படுகின்றன. ஆகையால், நல்ல கட்டட வசதியுடன் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். போதிய காற்றோட்ட வசதி, நூலகம், ஆய்வகம் எல்லாம் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

61. பெண்களும் ஆண்களும் இணைந்து படிக்கும் கல்லூரி எனில் கழிப்பறை வசதி பாதுப்பானதா, போதிய தண்ணீர் கிடைக்கிறதா என்பதை அவசியம் கண்காணியுங்கள்.

62. கல்லூரியில் பணியாற்றும் லெக்சரர்களுக்கு குறைந்தபட்ச அனுபவம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

63. சில தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க முடியாமல் லெக்சரர்கள் திடீரென ராஜினாமா செய்துவிட்டுப் போவதால் பல மாதங்களுக்கு லெக்சரர் இல்லாமலேயே பாடம் படிக்கிறார்கள் மாணவர்கள். எனவே, கவனம் அவசியம்.

64. கல்லூரியின் கல்வித் தரத்தை தெரிந்து கொள்ள, பல்கலைக்கழகத் தேர்வில் குறிப்பிடத்தக்க தேர்ச்சி விகிதத்தை அந்தக் கல்லூரி பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

65. ஹாஸ்டல் எனில்... பெண்கள் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு உள்ளதா, எத்தனை வார்டன்கள், இரவு நேர காப்பாளர்கள் எத்தனை பேர் உள்ளனர், அருகில் மருத்துவமனை உள்ளதா, சாப்பாடு தரமானதா, தண்ணீர், கழிப்பிட வசதி, ஹாஸ்டலுக்குள் இருக்கும் விதிமுறைகள் ஆகியவற்றை கட்டாயம் கேட்டுத் தெரிந்து கொண்டு பின் பிறகு சேருங்கள்.

66. கல்லூரியில் 'ராகிங்' கலாட்டா இருக்கிறதா, இதற்கு முன்பு ஏதேனும் கடுமையான சண்டைகள், பிரச்னைகள் நடந்துள்ளதா என்பதை அங்கு படிக்கும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

67. கல்லூரியில் சேரும் முன்பே கல்விக் கட்டணம் மொத்தமாக எவ்வளவு வரும் என்பதை தெளிவாக விசாரியுங்கள். பிறகு, மாதம் மாதம் ஒரு ஃபீஸ் என்று தொல்லை தரமாட்டார்கள்தானே என்பதையும் உறுதி செய்யுங்கள்.

68. கல்லூரி வாகனங்களில்தான் செல்ல வேண்டும் என்றால், அந்த வாகனத்தின் கண்டிஷன், அனுபவமுள்ள டிரைவர்தான் ஓட்டுகிறாரா என்பதை நிச்சயம் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

69. பொறியியல் கல்லூரிகள் எனில், அங்கு தரமான நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் கேம்பஸ் இன்டர்வியூவுக்கான வாய்ப்புகள் உள்ளனவா... அவையும் திருப்திகரமானவையா என்பதை அறிந்துகொள்வது அவசியம்.

இந்திய அளவில் எழுதப்படும் தேர்வுகள்!

70. நம் நாட்டில் ஐ.ஐ.டி.(IIT) நிறுவனங்கள் மொத்தம் 15 உள்ளன. இவற்றில் சேர, JEE எனும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கான அப்ளிகேஷன், வங்கிகளில் கிடைக்கும். IIT வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் அப்ளை செய்யலாம். ஆண்டு தோறும் குறிப்பிட்ட மாதத்தில்தான் இதற்கான விண்ணப்பங்கள், தேர்வு உள்ளிட்ட நடைமுறைகள் ஆரம்பமாகும். தேதி மட்டும் மாற்றத்துக்குட்பட்டது.

பரீட்சை தேதி: ஏப்ரல் 2010, இரண்டாவது வாரம்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் நாட்கள்: நவம்பர் 2009, மூன்றாவது வாரத்திலிருந்து.

விண்ணப்பங்கள் வாங்க கடைசி நாள்: டிசம்பர் 2009, மூன்றாவது வாரம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: டிசம்பர் இறுதி வாரம் 2009.

ரிசல்ட் அறிவிக்கும் நாள்: மே கடைசி வாரம் 2010.

தேர்வு: மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். அப்ஜெக்டிவ் டைப்பில் இரண்டு பாடங்களில் கேள்வித்தாள் இருக்கும். கேள்வித்தாளில் இடம் பெறும் பாடப்பிரிவுகள் இயற்பியல், வேதியியல், கணக்கு.

அதிக விவரங்களுக்கு www.jee.iitd.ac.in www.entrance_exam.net

71. டெல்லியிலிருக்கும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (AIIMS) நிறுவனம் ஆண்டுதோறும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்தி வருகிறது. ப்ளஸ் டூ தேர்வில் உயிரியல் பாடப்பிரிவில் 50% மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த நுழைவுத்தேர்வை எழுதத் தகுதியுடையவர்கள். தேர்வுகளும், இந்த ஆண்டு அவை நடைபெறும் நாட்களும் கீழே இடம்பெறுகின்றன (ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நாட்கள் மாற்றத்துக்குரியது). மேலும் அதிக விவரங்களுக்கு: எக்ஸாமினேஷன் செக்ஷன், ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், அன்சாரி நகர், புதுடெல்லி 110029.

தொலைபேசி: 011-26588580, 26588700.

72. ஐந்தாண்டு படிப்பான எம்.பி.பி.எஸ்ஸை இங்கே படிப்பவர்களுக்கு உலக அளவில் நல்ல மரியாதை உண்டு. இதில் இடம் கிடைப்பதென்பது ஏகபோராட்டம்தான். திறமையோடு முட்டி மோதினால் வெற்றி நிச்சயம். தகுதியான வேலை, தரமான சம்பளம் என்று வலம் வரலாம். தேர்வு நாள்: 01-06-2010. முடிவு அறிவிக்கப்படும் நாள்: 15-7-2010

73. மூன்று ஆண்டு படிப்பான பி.எஸ்சி. பாராமெடிக்கல் கோர்ஸில் லேப் டெக் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள் சொல்லித்தரப்படுகின்றன. எம்.பி.பி.எஸ். போலவே எய்ம்ஸின் (AIIMS) இந்தப் படிப்புக்கும் உலகளாவிய மரியாதைதான். தேர்வு நாள்: 5-6-2010.

74. மூன்றாண்டு படிப்பான பி.எஸ்சி. நர்ஸிங்கை எய்ம்ஸில் (AIIMS) முடிப்பதே கௌரவமான விஷயமாக பலராலும் பார்க்கப்படுகிறது. இதற்கும் நல்ல வரவேற்பு உண்டு. தேர்வு நாள்: 13-6-2010. முடிவு அறிவிப்பு நாள்: 23-6-2010.

75. தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான 'காமன் லா அட்மிஷன் டெஸ்ட்' (CLAT), மே மாதம் நடைபெறுகிறது. 1,500 சீட், ஐந்தாண்டு படிப்பான பி.ஏ.எல்.எல்.பி-க்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விநியோகிக்கப்படும். பெங்களூரு, ஹைதரபாத், போபால், கொல்கத்தா, ஜோத்பூர், ராய்ப்பூர், காந்திபூர், லக்னோ, பட்டியலா, பாட்னா, கொச்சியில் இந்த தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன.

எதிர்காலத்தில் அதிக வாய்ப்பிருக்கும் படிப்புகள்..!

இன்ஜினீயரிங் படித்தால் உடனே வேலை கிடைக்கும் என்பதால் வீட்டுக்கு ஒரு இன்ஜினீயரை உருவாக்கினார்கள். இன்று இன்ஜினீயரிங் படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் மட்டுமே லட்சங்களில் நீள்கிறது. அதேபோல்தான் ஐ.டி. துறையும். இதையெல்லாம் பார்த்துக் குழம்பிப் போய் இருப்பவர்கள், 'எதைப் படித்தால் வேலை நிச்சயம்...?' என்ற கேள்வியோடு காத்திருப்பவர்கள்... இனி வரும் டிப்ஸ்களை கவனமாக படியுங்கள்.

76. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப் பெரிய மாறுதல்களை காணப்போகிறது. அதனால் சமூகம், உறவு சார்ந்த பிரச்னைகள் அதிகம் தலைதூக்கும். அந்த பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் படிப்புகளை படித்தவர்கள்தான் அப்போதைய மில்லியனர்கள்.

77. உலகில் அரசியல், சமூகம், பொருளாதாரம் சுற்றுச்சூழல் ஆகிய 4 முக்கிய காரணிகளின் அடிநாதமே பிரச்னைக்கு உள்ளாகும். அந்தக் காலகட்டத்தில் 'சமூக அறிவியல்' தொடர்பான எம்.எஸ்.டபில்யூ. (MSW-Master of Social Work) படித்தவர்களின் எதிர்காலம் மிக பிரகாசமாகும்.

78. ஐ.டி. துறையில் ஏற்பட்ட தடுமாற்றம் போல் வரும் காலத்தில் பல துறைகளிலும் புயல் அடிக்கும். இதனால், மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கப் போவது சமூக மனநலம், தனிநபர் மனநலம் சார்ந்த பிரச்னைகளே. அந்த சூழ்நிலையில் Sociology, Psychology, Anthropology, Social Work போன்ற படிப்புகள் பணம் தரும் கற்பகத் தரு!

79. எந்த நெருக்கடியும் ஏற்படாமல் இயல்பான சமூக வாழ்க்கை நீண்டாலும், பில்கேட்ஸ் துறையில் பணம் கொட்டினாலும் இன்றும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிக வேலை வாய்ப்பினை பெறுபவர்கள்... சமூக அறிவியல் துறை சார்ந்தவர்களே! காரணம் அனைத்து முன்னணி நிறுவனங்களில் Corporate Social responsibility என்ற ஒரு துறை பெரிய அளவில் இயங்கி வருவதே!

80. பணம் பெருகினாலும், வற்றினாலும் தனிமனித மகிழ்ச்சி, குடும்ப சந்தோஷத்தில் குழப்பம், உறவுகளில் பிரிவு என்று பிரச்னைகள் பிரமாண்டமாக உருவெடுக்கும். ஆகையால், குடும்ப நல ஆலோசகர்கள் - கவுன்சிலிங் கொடுப்பவர்களுக்கு திடமான எதிர்காலம் உள்ளது.

81. டெக்னாலஜியால் ஏற்படும் விளைவு காரணமாக சுற்றுலாத்துறை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு.

82. சுற்றுலாத் துறையோடு தொடர்புடைய உணவகம், கைடு சர்வீஸ், போக்குவரத்து சேவை படிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு.

83. எப்போதும் வாய்ப்பிருக்கும் படிப்புகள்; கல்வி தொடர்புடைய மொழி பெயர்ப்பாளர், ஆசிரியர் மருத்துவத் துறையினர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதானதாக இருக்கும்.

திறந்த நிலை (Open Universities), தொலைதூரம் (Distance Education) ... தெளிவுக்கு சில துளிகள்

84. திறந்த நிலை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 14 திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்தும் டெல்லியிலுள்ள இந்திய தொலைதூரக் கல்வி கவுன்சிலால் ரெகுலேட் செய்யப்படுகின்றன.

85. இதன் நோக்கம் இந்திய மக்கள் அனைவருக்கும் உயர்கல்வி கொடுப்பதே.

86. திறந்த நிலை கல்வியில் இந்திரா காந்தி ஓபன் யுனிவர்சிட்டிக்கு பெரிய நிறுவனங்களில் மதிப்பு உண்டு.

87. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 15 முதுநிலை பட்டப் படிப்பும் 17 இளநிலை பட்டப் படிப்பும், 5 டிப்ளமோ படிப்பும், 7 சர்டிஃபிகேட் கோர்ஸ்களும் அளிக்கப்படுகின்றன.

88. குறைந்தபட்சம் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள், பள்ளிக் கல்வியை இடையில் நிறுத்தியவர்கள், 18 வயது நிரம்பியிருந்தால் இங்கு விண்ணப்பித்து சேரலாம்.

89. திறந்த நிலை பல்கலைக்கழக பட்டத்தால் அரசு வேலை வாய்ப்பு பெற இயலாது.

90. சூழ்நிலை காரணமாக ரெகுலர் கல்லூரிக்கு செல்ல முடியாதவர்கள், பள்ளி இறுதிப் படிப்பை முடித்தவர்கள் தொலைதூரப் பல்கலைக்கழகத்தில் சேரலாம்.

91. தொலை தூர பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர், முதுநிலை பட்டப்படிப்புக்கு ரெகுலர் காலேஜில் சேரத் தகுதியுடையவர். இதுவே திறந்த நிலை கல்வியில் படித்தவர்களால் சேர முடியாது.

92. தொலை தூர கல்வியின் மூலம் பட்டம் பெற்றவர்கள், அடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

93. தொலை தூர கல்வி பட்டப்படிப்பும், பட்டயப் படிப்பும் அரசு வேலையில் சேரத் தகுதியுடையவை.

94. ஒரே சமயத்தில் இரண்டு பட்டம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ரெகுலர் காலேஜிலும், தொலை தூரக் கல்வி பல்கலைக்கழகத்திலும் படித்தால்... ஏதேனும் ஒரு பட்டம் மட்டுமே செல்லும்.

95. ஒரு பட்டத்தை தொலை தூரக் கல்வியிலும் இன்னொன்றை திறந்தநிலை பல்கலைக்கழகத்திலும் பெற்றிருந்தால் இரண்டுமே செல்லும். ஆனால், திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டம் வேலை வாய்ப்புக்கு உதவாது.

கல்வி... சில தகவல்கள்!

96. வேத காலத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் படித்திருக்கிறார்கள். அதற்கு பிற்பட்ட இடைக்காலத்தில் பெண் கல்வி சுருங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் மீண்டும் உயிர் பெற்றது.

97. 1971-ல் 22% பெண்களே கல்வி கற்றிருந்தனர். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி 54.16% பெண்கள் கல்வி கற்றுள்ளனர்.

98. உயர் கல்விக்காக இந்தியாவில் தற்போது மொத்தம் அரசு அங்கீகரித்த 227 யுனிவர்சிட்டிகள் உள்ளன.

99. இந்திய அரசின் உயர் கல்வித் துறையின் தகவலின்படி இந்தியாவில் 16,885 கல்லூரிகளும், அதில் 99.54 லட்சம் மாணவர்களும் படிக்கிறார்கள். இத்தனை மாணவர்களுக்கு 4.57 லட்சம் பேராசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள்.

100. டெக்னாலஜியின் அபரிமிதமான வளர்ச்சியால் இன்று ஆன் லைனிலும் பல படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. உலக மொழிகளைக் கற்றுத் தரும்படிப்புதான் முன்னணியில் உள்ளது.