Pages

Wednesday, November 17, 2010

ஐய்யப்பன் வரலாறு -2

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. தை மாதம் வரை, எங்கும் ஐயப்ப சரணகோஷம் ஒலிக்கும். இவரது வரலாறை புதிதாக மலைக்குச் செல்லும் கன்னி சுவாமிகள் தெரிந்து செல்ல வேண்டுமல்லவா!
தேவலோகத்தில் நாட்டியமாடும் ரம்பைக்கு, ஒரு மகள் இருந்தாள்; அவளது பெயர் மகிஷி. இவள் கடும் தவமிருந்து, இரண்டு ஆண்களுக்கு, அதுவும் சிவன் மற்றும் விஷ்ணுவுக்குப் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு வர வேண்டுமென்ற வரம் பெற்றாள்.
"ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது சாத்தியமல்ல...' என்பதால், தன்னைக் கொல்ல யாருமில்லை என்று எண்ணிய மகிஷி, பல அட்டூழியங்களைச் செய்தாள்; தேவர்கள் அவஸ்தைப்பட்டனர். விஷ்ணுவிடம், இதுபற்றி முறையிட்டனர்.
அவர், மோகினி வடிவம் தாங்கி, சிவன் முன் வந்தார். சிவனின் ஒளிவெள்ளம் அந்தப் பெண் மீது பாய்ந்தது. அந்த ஒளிவெள்ளத்தில் தர்மசாஸ்தா அவதரித்தார்.  சாஸ்தாவுக்கு 14 வயது வரும் வரை, சிவலோகத்திலேயே வளர்த்தார் சிவபெருமான். சாஸ்தா, மகிஷியைக் கொன்று, அழுதை எனும் நதிக்கரையில் உடலை வீசினார். மகிழ்ந்த தேவர்கள், சாஸ்தாவுக்கு பொன்னம்பல மேடு எனும் இடத்தில், மலர்மாரி பொழிந்து, வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் ரிஷி ஒருவர் பங்கேற்றார். அவர் சாஸ்தாவிடம், "நீ எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும்...' என வரம் கேட்டார். சாஸ்தாவும் அதை ஏற்று, கலியுகத்தில் அந்த ஆசை நிறைவேறும்!' என்றார்.
கலியுகம் பிறந்ததும், அந்த ரிஷி, தஞ்சாவூரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு விஜயன் என பெயர் சூட்டினர். முன்வினைப் பயனால், அவர் சாஸ்தாவின் பக்தராகத் திகழ்ந்தார். தனக்கு மகனாக சாஸ்தா பிறக்க வேண்டுமென பிரார்த்தித்தார். ஆனால், அப்பிறவியில் அந்த ஆசை நிறைவேறவில்லை. மறுபிறவியில் அவர் மலைநாட்டில், பந்தள மகாராஜாவாகப் பிறந்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில், உதயணன் என்பவன், கரிமலையில் தங்கி, மக்களின் பொருட்களைக் கொள்ளையடித்தான். அவனிடமிருந்து நாட்டைக் காக்க, சாஸ்தாவை மன்னர் வேண்டினார். பந்தளம் அரண்மனையில், ஜெயந்தன் என்ற பெயரில் பூசாரியாகப் பணிபுரிந்தார் சிவபெருமான். ராஜாவின் தங்கை மோகினியாக விஷ்ணு அவதரித்தார். ஒருமுறை மோகினியை உதயணன் கடத்தி விட்டான். அவளை மீட்க ஜெயந்தன் சென்றார்; அவரும் திரும்பவில்லை. தன் தங்கை இறந்திருப்பாள் எனக் கருதிய ராஜா, அவளுக்கு திவசம் செய்து விட்டார்.
ஆனால், ஜெயந்தன், மோகினியை மீட்டு வரும் வழியில், ஒரு துறவி அவர்களைச் சந்தித்தார். "மோகினிக்கு ராஜா திவசம் செய்து விட்டதால், அவளை அரண்மனையில் சேர்க்க மாட்டார்கள். நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே இருங்கள்...' என்று சொல்லி விட்டார்.
அவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, பந்தள ராஜா காட்டுக்கு வேட்டைக்காக வர இருப்பதை அறிந்த ஜெயந்தன், குழந்தையைக் காட்டில் வளர்ப்பது கஷ்டம் என்பதால், கழுத்தில் ஒரு மணியைக் கட்டி, ராஜா வரும் வழியில் போட்டு விடச் சொன்னார்; மோகினியும் அவ்வாறே செய்தாள். குழந்தை அங்குமிங்கும் புரளும் போது மணி ஒலித்தது. இதைக் கேட்ட ராஜா, குழந்தையைக் கண்டெடுத்தார். கழுத்தில் மணியுடன் பார்த்ததால், "மணிகண்டன்' என பெயரிட்டு, அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். குழந்தையில்லாத ராஜாவும், அவரது மனைவியும் மணிகண்டனை அன்புடன் வளர்த்தனர். இதன்பிறகு ராஜாவுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மணிகண்டன் இளமையில் பல சாகசங்கள் புரிந்து, புகழ்பெற்றதை விரும்பாத அமைச்சர் ஒருவர், அரசியின் மனதைக் கலைத்து, "உங்கள் பிள்ளைக்கு முடிசூட மணிகண்டன் தடையாக இருப்பான். அவன் அழிய வேண்டுமானால், உங்களுக்கு வயிற்றுவலி வந்தது போல நடியுங்கள். புலிப்பால் கொண்டு வந்தால் தான் குணமாகும் என வைத்தியரைச் சொல்லச் சொல்லுங்கள்...' என்றார்.
ராணியும் அவ்வாறே செய்தாள். மணிகண்டன் சற்றும் கலங்காமல் காட்டுக்குச் சென்றார். காட்டுவாசிகளான கடுத்தசுவாமி, கருப்பசுவாமி ஆகியோர் அவருடன் சென்றனர். இந்நேரத்தில் கொள்ளையன் உதயணன், தான் செய்த கொலைகளை காட்டில் வசித்த வாபர் என்பவர் செய்ததாகப் பழி போட்டான். ஆனால், இந்த விஜயத்தைப் பயன்படுத்தி உதயணனை ஐயப்பன் கொன்றார். வாபர் அவரது நண்பரானார். புலிப்பாலுடன் ஊர் திரும்பினார். ராணி கலக்கமடைந்து மன்னிப்பு கேட்டாள்.
பின்னர் ராஜாவிடம் சபரிமலையிலுள்ள தர்மசாஸ்தாவின் கோவிலை புதுப்பிக்க வேண்டினார் மணிகண்டன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றவர்கள், வனவிலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஆயுதங்களுடனும், முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டும், கறுப்பு அல்லது நீல ஆடை அணிந்து கொண்டும் மலையேறினர். கோவிலுக்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்லக்கூடாது என்பதால், ஓரிடத்தில் குவித்து விட்டனர். அந்த இடம் சரங்குத்தி என்று பெயர் பெற்றது. கோவிலை நெருங்கும் நேரத்தில் பெரும் சூறாவளி ஏற்பட்டது. அப்போது மணிகண்டன் சாஸ்தாவின் சிலையில் ஐக்கியமாகி விட்டார். அவர் சன்னிதி முன் கடுத்தசுவாமியும், கருப்பசுவாமியும் காவல் நிற்க அனுமதியளித்தார். தன் முடிசூட்டுக்காக செய்யப்பட்ட நகைகளை பந்தளராஜா ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று மலைக்கு கொண்டு வரும்படி அறிவித்தார்.
அவர் பந்தளத்தில் தங்கியிருந்த காலத்தில் குருகுலத்தில் பாடம் கற்றார். அப்போது குருவின் மகள் மணிகண்டனைக் காதலித்தாள். மணிகண்டன் அந்தக் காதலை ஏற்கவில்லை. தன்னைப் பார்க்க சபரிமலைக்கு எப்போது கன்னிசுவாமிகள் வரவில்லையோ அந்நாளில் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். ஆனால், அவளுக்கு தன் இருப்பிடத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து தங்கச் செய்தார். அவளை மாளிகைபுறத்தமன் என்றும், மஞ்சள்மாதா என்றும் அழைக்கின்றனர்.
மணிகண்டனை ஐயப்பன் என்றே பெரும்பாலானவர்கள் அழைக்கின்றனர். இதற்கு, "தலைவன் உயர்ந்தவன்' என்று பொருள். உயர்ந்த மலையிலுள்ள ஐயப்பனின் வரலாறைத் தெரிந்து கொண்டவர்கள், முறைப்படி விரதமிருந்து, கெட்ட பழக்கங்களையெல்லாம் நிரந்தரமாக கைவிட உறுதியெடுத்து, சபரிமலைக்குச் சென்று வாருங்கள்.      

-- சௌர்சே dinamalar

0 comments:

Post a Comment